ஜிப்மர் தொடங்கியுள்ள புதிய தொலைமருத்துவ முன்முயற்சி தென்னிந்திய மாநிலங்களுக்கான தொலை மருத்துவ சேவைகளின் பிராந்திய மையமாக ஜிப்மர் செயல்பட்டு வருகிறது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கான தொலை மருத்துவ சேவைகளை மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மின்-சுகாதாரப் பிரிவின் கீழ் ஒருங்கிணைத்து ஜிப்மர் வழங்கிவருகிறது. தேசிய மருத்துவக் கல்லூரி கட்டமைப்பு திட்டம், தேசிய அறிவுசார் கட்டமைப்பு, இஸ்ரோ திட்டம், தொலை மருத்துவ திட்டம், பிம்ஸ்டெக் தொலை மருத்துவ திட்டம், மொராக்கோ தொலை மருத்துவ திட்டம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய தொலை மருத்துவத் திட்டங்கள் ஜிப்மரில் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் ஜிப்மரின் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி பின்வரும் புதிய தொலை மருத்துவ சேவைகளை தொடங்கி வைத்துள்ளார். புதுச்சேரி மாநிலம், ஏனாமில் செயல்பட்டு வரும் ஜிப்மர் கிளையில், அவசர மருத்துவ சேவைப் பிரிவு மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை பிரிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஏனாம் தொலை மருத்துவ சேவை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஜிப்மர் புதுச்சேரியுடன் இணைக்கும் இந்த 'ஜிப்மர் தொலைவழி-ஏனாம் சேவை' ஏனாம் நோயாளிகளுக்கு 24x7 ஆன்லைன் ஆலோசனைகளை வழங்குகிறது. ஜிப்மர் தொலைவழி - அவசர ஊர்தி சேவையில், ஜிப்மர் அவசர ஊர்தி முழுமையான தொலை மருத்துவ உபகரணங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நோயாளியை ஜிப்மர் அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டுவருவதற்கு முன்பே, விபத்து நடந்த இடத்திலேயே அவசர ஊர்தி மருத்துவருக்கு ஜிப்மரின் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் தேவையான உயிர்காக்கும் ஆலோசனைகளை வழங்குவர். இதன் மூலம் கோல்டன் ஹவர் என்றழைக்கப்படும் மருத்துவத்தில் இன்றியமையாத நேரமானது துரிதமாக கையாளப்படும். ஜிப்மர் அவசர மருத்துவ சேவைப் பிரிவில் மூன்று தளங்களிலும் நோயாளி-உதவியாளர் ஆன்லைன் கருத்துக் கேட்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. அவசர மருத்துவ சேவையில் நோயாளி பராமரிப்பை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக, இந்த அமைப்பு, நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் ஜிப்மர் அவசர சிகிச்சை பிரிவில் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அனுமதிக்கும். மேலும் நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களிடமிருந்து வரும் கருத்துகளின் அடிப்படையில் ஜிப்மர் அதிகாரிகளால் தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படுகின்றன. 'நோயாளி-உதவியாளர் வழிகாட்டி அமைப்பு / செயலி' அறிமுகப்படுத்தும் செயல்முறையிலும் ஜிப்மர் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் நோயாளி மற்றும் உதவியாளர் தங்களுக்குத் தேவையான குறிப்பிட்ட புற சிகிச்சைப் பிரிவு /ஆய்வகத்தைக் கண்டறிய ஆன்லைனில் வழிகாட்டுதலைப் பெறலாம். இந்த சேவை ஜிப்மரில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்