<div id="MiddleColumn_internal"> <ul> <li style="text-align: justify; ">பெண்கள் பிரசவக்காலத்தில் தூக்கமின்றி அவதிப்படுவதை கண்டிருக்கலாம். இவர்கள் கஷ்டப்படுவதை கண்டால் உடன் இருப்பவர்களுக்கு கூட உறக்கம் வராது. குழந்தை பிறக்கும் வரைக்கும் தூக்கமின்றி அவதிப்படும் தாய்மார்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.</li> <li style="text-align: justify; ">அதிலும் முதல் பிரசவம் என்றால் அவர்களுக்கு பயமும் தொற்றியிருக்கும். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு குடல் இயக்க பிரச்சனை ஏற்படுவது இயல்பு என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மற்றும் உடல் எடை, அழுத்தம் போன்ற காரணத்தினால் அவ்வப்போது சிறுநீர் வந்துக் கொண்டே இருக்கும். இதனால் கூட அவர்களது தூக்கம் பாதிக்கிறது.</li> <li style="text-align: justify; ">பெரும்பாலும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மதியம் மற்றும் மாலை இடைப்பட்ட நேரத்தில் தூங்குவது இயல்பு. இதன் காரணாமாக அவர்களது இரவு நேர தூக்கம் பாதிக்கப்படுகிறது. பெண்களுக்கு கர்ப்பம் தரித்த முதன்மை காலத்தில் குமட்டல் ஏற்படும் போதே, குடல் இயக்க திறனில் இயல்பாக சிறிய குறைபாடு ஏற்படும். இதனால் செரிமான பிரச்சனை ஏற்படுகிறது.</li> <li style="text-align: justify; ">இதனால் நெஞ்செரிச்சல், வாயு போன்ற உடல்நல குறைபாடுகள் ஏற்படலாம். இதை தவிர்க்க சரியான காய்கறி, பழங்கள் மற்றும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மாதாமாதம் குழந்தையின் வளர்ச்சியால் வயிறு பெரிதாக ஆரம்பிக்கும். வயிறு பெரிதாக இருப்பதால் அவர்களால் சௌகரியமாக படுத்து உறங்க முடியாது.</li> <li style="text-align: justify; ">மற்றும் திரும்பி படுக்கும் போது கருவில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற அவர்களது அச்சமும் கூட தூக்கம் களைவதற்கு ஓர் காரணமாக இருக்கிறது. தாய் அசையாமல் இருக்கும் போது, கருப்பையில் வளரும் கரு அசைந்து ஆட ஆசைப்படுமாம். கருவில் வளரும் சிசுவின் மேல் தாய் வைத்திருக்கும் அன்பும் கூட ஓர் காரணம். தன்னால் சிசுவிற்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற தாயின் அக்கறை தான் 10 மாதங்கள் கூட தூக்கத்தை தொலைக்க அவளை தூண்டுகிறது.</li> </ul> <p style="text-align: justify; "><b>ஆதாரம் : </b>குங்குமம் மருத்துவ இதழ்</p> </div>