<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">நோக்கம்</h3> <p style="text-align: justify;">பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் இருந்து மாதம் ஒருமுட்டை வெளியாகும். அது விந்துவுடன் சேர்ந்து கரு உருவாகும். அது கருப்பையில் வளர்ச்சியடைந்து குழந்தை பிறக்கிறது. பலரும் சினைப்பையும் கருப்பையும் குழந்தை பிறப்பதற்காக மட்டும் தான் என்று நினைக்கிறார்கள்.</p> <ul> <li style="text-align: justify;">பெண்களின் சினைமுட்டைப்பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்தான் பெண் தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது.</li> <li style="text-align: justify;">மாத விடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகம் இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து விடும்.</li> <li style="text-align: justify;">பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சராசரி வயது 51. மாதவிடாய் நிற்பதற்கு முன்பே கருப்பையை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்.</li> <li style="text-align: justify;">உடல்சூடு இரவில் அதிகம் வியர்த்தல் தூக்கமின்மை அடிக்கடி கோபம் சலிப்பு மறதி மனஉளைச்சல் உடல் வலி போன்ற பிரச்சனைகள் தாக்கும்.</li> <li style="text-align: justify;">சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று உண்டாகும்.</li> <li style="text-align: justify;">உடலுறவில் பிரச்சனை ஏற்படும்.</li> <li style="text-align: justify;">எலும்பு தேய்மானம் மற்றும் முதுகெலும்பு உடைதல் உள்ளிட்ட தொந்தரவுகளும் வரும்.</li> <li style="text-align: justify;">பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருப்பையை எடுக்கும்போது இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.</li> <li style="text-align: justify;">தவிர்க்கமுடியாத காரணத்தால் கருப்பையை எடுக்க நேரும்போது சினைமுட்டைப் பையை விட்டு விட்டால் இப்பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர்.</li> <li style="text-align: justify;">ஆனால் கருப்பை எடுத்த சில ஆண்டுகளிலேயே சினைமுட்டைப்பையும் இயங்காது இந்த மெனோபாஸ் அறிகுறிகளுக்கு ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி சிகிச்சை உண்டு.</li> <li style="text-align: justify;">ஆனால் அது கடும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். ரத்தக் குழாயில் ரத்தம் உறைதல் மார்பக புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே கருப்பையை எடுப்பதை விட அதை பாதுகாப்பதே சிறந்தது.</li> </ul> <h3 style="text-align: justify;">பாதுகாப்பு முறை</h3> <p style="text-align: justify;">அதிகமாக உதிரம் போதல், வலி, சிறிய கட்டிகள், வெள்ளைப்படுதல் ஆகியவற்றை காரணம் காட்டி கருப்பையை அகற்ற வேண்டாம். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு மாற்றுவழிகளை கடைபிடிக்கலாம். கட்டி மிகவும் பெரிதாக இருத்தல், வளர்ந்து கொண்டே போதல், கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பு இருத்தல், மாதவிடாய் உதிரம், மருந்துக்குக் கட்டுப்படாமல் போதல் போன்ற வழியில்லாத காரணத்தால் மட்டுமே கருப்பையை அகற்றலாம்.</p> <p style="text-align: justify;">பிறகு கட்டி வரலாம் என்ற கற்பனையில் கருப்பையை அகற்றக் கூடாது. நவீன மருத்துவத்தில் சினைப்பை மற்றும் கருப்பையை அகற்றாமலேயே கட்டியை அகற்ற லேப்ராஸ்கோபி முறையில் பல சிகிச்சைகள் உள்ளன. மெனோபாஸ் பிரச்சனைகளுக்கு கர்ப்பவியல் நிபுணர்களை அணுகும்போது சரியான மருத்துவம் கிடைக்கும். கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை எதுவாக இருந்தாலும் அதில் சில பிரச்சனைகளும் இருக்கும்.</p> <p style="text-align: justify;">கருப்பை வாயில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பதை சிறிய சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். 24 வயது முதல் 64 வயது வரை உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்கள் 3 ஆண்டுக்கு ஒருமுறை பேப் ஸ்மியர் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முடிந்தளவு கருப்பை மற்றும் சினை முட்டைப்பையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: விதைவிருட்சம்</p> </div>