<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">உடல் ரசாயனத் திரவங்களின் அமில காரச் சமநிலையை அறிந்து கொண்டு அதற்கேற்ற உணவுகளை உண்டு ஆரோக்கியம் பேணுவதே ஆரோக்கிய சமநிலை முறையாகும்.</p> <h3 style="text-align: justify;">பரிசோதனை முறை</h3> <ul> <li style="text-align: justify;">இப்படி உடலின் உட்புறத்தை பேணும் கலை, ‘ஆரோக்கிய சமநிலை’ என்று அழைக்கப்படுகிறது. உடல் ரசாயனத் திரவங்களின் அமில காரச் சமநிலையை அறிந்து கொண்டு அதற்கேற்ற உணவுகளை உண்டு ஆரோக்கியம் பேணுவதே ஆரோக்கிய சமநிலை முறையாகும்.</li> <li style="text-align: justify;">அமில கார பரிசோதனை முறை நீண்டகாலமாக வழக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இவர்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வலியுறுத்தி வருகிறார்கள். ‘பிஎச்’ பரிசோதனை எனப்படும் அமில கார பரிசோதனை உடலில் இருக்கும் ரசாயன பொருட்கள் (அமிலம்)- அல்கலின் (காரம்) அளவை தெளிவாக காட்டிவிடும்.</li> <li style="text-align: justify;">அமிலமும், காரமும் சீரான அளவில் இல்லாவிட்டால், ஏதாவது ஒன்றின் அளவு அதிகரிக்கும்போது நோய்கள் குடிபுகும். வேகமாக மூப்படைதல், வைட்டமின் அளவு குறைதல், உடல் பருமனாதல், நொதிகளின் செயல்பாடு குறைவது, எரிச்சல் ஏற்படுதல், உறுப்புகளின் செயல்பாடு முடங்குதல் என ஏராளமான பாதிப்புகள் ஆரம்பமாகும்.</li> <li style="text-align: justify;">உடம்பின் அமில காரத்தன்மை அளவு ஒன்று முதல் 14 வரை இருக்க வேண்டும். இந்த அளவு 7-க்கு கீழ் குறைந்தால் உடலில் அமிலத்தன்மை மிகுந்திருப்பதாகவும், 7-க்கு அதிகரித்தால் காரத்தன்மை மிகுந்திருப்பதாகவும் கருதலாம். நோய் எதிர் பொருட்கள், அவசியமான தாதுக்கள், வைட்டமின்கள் அளவு சரியாக இருக்கும்போது இந்த அமில காரச் சமநிலையும் சீராக இருக்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். உதாரணமாக பற்கள் வெண்மையாக இருப்பது குடல்பகுதி தூய்மையாக இருப்பதன் அடையாளம். பற்களில் மஞ்சள் கறை படிந்தால் உடலில் அமிலத்தன்மை அதிகமானதன் ஒரு அறிகுறி.</li> <li style="text-align: justify;">வேப்பங்குச்சியால் பல்துலக்குவது ஒரு பழமையான இந்திய வழக்கம். இந்த குச்சியை ஆங்கிலத்தில் ‘டாடூன்’ என்று குறிப்பிடுவது உண்டு. இந்த வழக்கம் சிறந்த நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டது. பாக்டீரியா கிருமிகளை அண்ட விடாது. வேப்பங்குச்சியால் பல்துலக்கும் வழக்கம் வாய்ப் பகுதி முதல் குடல்பகுதி வரை ஆரோக்கியம் தரக்கூடியது. மேலும் பித்தநீரால் விளையும் பற்கறை போன்றவற்றையும் தடுத்து, காரச் சம நிலையை ஏற்படுத்தும் என்று இந்திய பண்பாட்டை பெருமைப்படுத்துகிறார்கள் இந்த மருத்துவ ஆய்வுக்குழுவினர்.</li> <li style="text-align: justify;">ஆரோக்கிய சமநிலையை குலைக்கும் அமிலங்கள் பற்றி இவர்கள் அதிகம் பேசுகிறார்கள். “நமது உணவுப் பொருட்கள் உடலில் அமிலத்தன்மையை குறைத்துக் கூட்டும் தன்மை கொண்டவை. இதனால் உடலில் மாசுகள் சேரும். அல்கலின் காரப்பொருட்களோ அமிலத்தன்மை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும். அமிலம் அதிகரிப்பதால் நச்சுகளை அகற்றும் தன்மை உடலுக்குள் குறைந்துவிடுகிறது. இதனால் நோய்த் தாக்குதல்கள் தொடங்குகின்றன. சருமம் பொலிவு குறைவது, முடி உலர்ந்து காணப்படுவது, நகம் உடைதல் போன்ற அறிகுறிகள் அமிலத்தன்மை அதிகரித்துவிட்டதைக் காட்டும் அறிகுறிகளாகும்.</li> <li style="text-align: justify;">உடல் இயற்கையாகவே அமில-காரத்தன்மையை சமன்செய்து கொள்ளக் கூடியது. அதற்காக நாம் கூடுதலாக எந்த முயற்சியும் செய்யாவிட்டாலும் உடலே அந்த வேலையை கவனித்துக் கொள்ளும். இருந்தாலும் இந்தச் சமநிலையில் மாறுபாடு ஏற்பட்டால் அதை நாம்தான் சரி செய்ய வேண்டும். அமிலகாரத் தன்மையை சீராக வைக்கும் உணவுகள் என்று தனியாக எதுவும் இல்லை. காய்கறிகள், பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வது அமில காரத்தன்மையை சீராக வைத்துக் கொள்ளும் ஒரு வழியாகும்” என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.</li> <li style="text-align: justify;">உதாரணமாக எலுமிச்சை அதிக அளவில் அமிலத்தன்மை கொண்டதாகும். ஆனால் அதை உண்ணும்போது உடலில் அந்த அமிலம் வளர்சிதை மாற்றம் அடைந்து காரத்தன்மையாக மாற்றம் பெறுகின்றன. இதனால் அமிலகாரச் சமநிலை ஏற்படுகிறது. “காரத்தன்மை மிகும்போது எரிச்சலடைதல், நடுக்கம், பதற்றம் ஏற்படுதல், வலிப்பு உண்டாதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்”</li> <li style="text-align: justify;">அமில காரத்தன்மைகளை வீட்டிலேயே பரிசோதிக்கும் எளிய கருவிகள் கிடைக்கின்றன. இதில் நமது உமிழ்நீரையோ அல்லது சிறுநீரையோ ஒரு துளி விட்டாலும் அமில கார அளவை காட்டிவிடும். காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் அல்லது சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்து இந்த பரிசோதனை மேற்கொள்ளலாம். பரிசோதனை முடிவுக்கு ஏற்ப உணவுகளை உண்டு ஆரோக்கியம் பெறலாம்</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம்: மருத்துவ மலர்</p> </div>