<div id="Middlecolumn_internal"> <p style="text-align: justify;">கோடைகாலத்தில் சாலையோரத்தில் சரம் சரமாக பூத்து குலுங்குவது சரக்கொன்றை மரம். பல்வேறு நன்மைகளை கொண்ட இது, நோய்களை விரட்டும் மூலிகையாக விளங்குகிறது. இதன் காய்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.</p> <p style="text-align: justify;">சரக் கொன்றை மரத்தின் இலை, பட்டை ஆகியவை மருந்தாகிறது.</p> <h3 style="text-align: justify;">படர்தாமரைக்கான மேல்பூச்சு மருந்து</h3> <p style="text-align: justify;">இலையை பசையாக அரைத்து சாறு எடுக்கவும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். படர்தாமரை உள்ள இடத்தில் இதை பூசும்போது குணமாகும்.</p> <p style="text-align: justify;">சரக்கொன்றையின் இலை, பூ ஆகியவை மருத்துவ குணங்களை கொண்டது. தோல்நோய்களுக்கு மருந்தாகிறது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.</p> <h3 style="text-align: justify;">வயிற்றை சுத்தப்படுத்தும் மருந்து</h3> <p style="text-align: justify;">நெல்லிக்காய் அளவுக்கு சரக்கொன்றை புளியை எடுத்துக் கொள்ளவும். இதனுடன், அரை ஸ்பூன் திரிபலா சூரணம் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடிக்கும்போது, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி வயிற்றை சுத்தம் செய்யும்.</p> <p style="text-align: justify;">அதிக வயிற்றுபோக்கு இருக்கும்போது மோரில் உப்பு போட்டு குடித்தால் சரியாகும். வயிறு சுத்தமாவதால் மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.</p> <h3 style="text-align: justify;">வெள்ளைப்போக்கு, காமாலைக்கான மருந்து</h3> <p style="text-align: justify;">10 சரக்கொன்றை பூக்கள், துளிர் இலைகளை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். தேவையான அளவு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து குடித்துவர வெள்ளைபோக்கு, காமாலை சரியாகும்.</p> <p style="text-align: justify;">சரக்கொன்றை அற்புதமான மருந்தாகிறது. மரத்தின் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாக விளங்குகிறது.</p> <p style="text-align: justify;">இதன் பூக்கள், இலைகளை தேனீராக்கி குடிப்பதன் மூலம் நோய் நீக்கியாக விளங்குகிறது. புற்றுநோயை தடுக்கிறது. கொழுப்புசத்தை நீக்குகிறது. காய்ச்சல், சளிக்கு மருந்தாகிறது</p> <h3>மலச்சிக்கலுக்கான மருந்து</h3> <p style="text-align: justify;">சரக்கொன்றை பூக்களின் மென்மையான இதழ்களை மட்டும் தனியாக எடுக்கவும். இதனுடன் தேன் சேர்த்து இதழ்களை நன்றாக ஊற வைக்கவும்.</p> <p style="text-align: justify;">இதன்மீது ஒரு மெல்லிய துணி கட்டி 4 நாட்கள் வரை வெயிலில் காயவைக்கவும். பின்னர் இதை நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் சரியாகும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தினகரன் நாளிதழ்</p> </div>