<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">கறிவேப்பிலை</h3> <p style="text-align: justify;">கறிவேப்பிலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.</p> <p style="text-align: justify;">தாளிக்கும் போது சேர்க்கப்படும் ஓர் பொருள் தான் கறிவேப்பிலை. இந்த கறிவேப்பிலையை பலரும் சாப்பிடும் போது தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் கறிவேப்பிலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.</p> <p style="text-align: justify;">கறிவேப்பிலையைக் கொண்டு நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அதிலும் உடல் பருமனைக் குறைக்க, நீரிழிவைத் தடுக்க, மலச்சிக்கலை போக்க, செரிமான பிரச்சனைகளைத் தடுக்க என பலவற்றை கறிவேப்பிலையைக் கொண்டு சரிசெய்லாம்.</p> <p style="text-align: justify;">இங்கு உடலில் ஏற்படும் பிரச்சனைகளைக் குணப்படுத்த கறிவேப்பிலையை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: center;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/health/b86bb0b95bcdb95bbfbafb95bcd-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/curryleafbenefit.jpg" /></p> <h3>இரத்த சோகை</h3> <p style="text-align: justify;">நாள்பட்ட இரத்த சோகை கொண்டவர்கள், உலர்ந்த கறிவேப்பிலையை பொடி செய்து சுடுநீர் அல்லது பாலுடன் சேர்த்து கலந்து பருகி வர, விரைவில் சரியாகும்.</p> <h3>கண்புரை</h3> <p style="text-align: justify;">வயதான காலத்தில் கறிவேப்பிலையை சாறு எடுத்து, அந்த சாற்றினைப் பருகி வந்தால், அது பார்வை கோளாறுகளைத் தடுப்பதோடு, முதுமையில் ஏற்படும் கண் புரை நோயின் தாக்கத்தையும் தடுக்கும்.</p> <h3>மலச்சிக்கல்</h3> <p style="text-align: justify;">மலச்சிக்கலால் பல நாட்களாக அவஸ்தைப்பட்டு வருகிறீர்களா? அப்படியெனில் 4-5 நாட்கள் சிறிது கறிவேப்பிலையை வெயில் நிழலில் உலர்த்தி, பொடி செய்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியுடன், தேன் கலந்து சாப்பிட வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்</p> <h3>வயிற்றுப்போக்கு</h3> <p style="text-align: justify;">15-20 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால், வயிற்றுப்போக்கு உடனடியாக நின்றுவிடும்.</p> <h3>உடல் பருமன்</h3> <p style="text-align: justify;">உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொண்டு வர வேண்டும். இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் பருமன் குறைவதோடு, நீரிழிவும் தடுக்கப்படும். முக்கியமாக இம்முறையை 3 மாதம் தொடர்ந்து செய்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.</p> <h3>வயிற்றுக்கடுப்பு</h3> <p style="text-align: justify;">வயிற்றுப்போக்குடன் இரத்தம் மற்றும் சளி வெளியேறும் நிலையைத் தான் வயிற்றுக்கடுப்பு என்று சொல்வார்கள். இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே தீர்வு காண, தினமும் 8-10 கறிவேப்பிலை இலைகளை பச்சையாக உட்கொள்ள வேண்டும்.</p> <h3>காலைச் சோர்வு</h3> <p style="text-align: justify;">கர்ப்பிணிகளுக்குத் தான் காலைச் சோர்வு ஏற்படும். இதனைத் தவிர்க்க 10 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து பருக வேண்டும்.</p> <h3>குமட்டல் மற்றும் வாந்தி</h3> <p style="text-align: justify;">மோருடன் கறிவேப்பிலையை அரைத்து கலந்து குடித்து வர, குமட்டல் மற்றும் வாந்தியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.</p> <h3>செரிமான கோளாறு</h3> <p style="text-align: justify;">செரிமான கோளாறுகளால் அவஸ்தைப்படுபவர்கள், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து பருக உடனே செரிமான பிரச்சனைகள் குணமாகும்.</p> <h3>பசியின்மை மற்றும் சுவையின்மை</h3> <p style="text-align: justify;">உங்களுக்கு சரியாக பசி எடுப்பதில்லையா? சுவை எதுவும் தெரியவில்லையா? அப்படியெனில் அதனை சரிசெய்ய, மோரில் கறிவேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து சேர்த்து, அத்துடன் சீரகப் பொடி, ப்ளாக் சால்ட் சேர்த்து கலந்து பருக வேண்டும்.</p> <h3>சிறுநீரக பிரச்சனைகள்</h3> <p style="text-align: justify;">கறிவேப்பிலை ஜூஸ் உடன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து பருகி வந்தால், சிறுநீரக சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும்.</p> <h3 style="text-align: justify;">பூச்சிக்கடி</h3> <p style="text-align: justify;">பூச்சிக்கடியைக் குணப்படுத்த கறிவேப்பிலை மரத்தில் உள்ள பழங்களை அரைத்து அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ விரைவில் சரியாகும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: ஒன்இந்திய நாளிதழ்</p> </div>