கழுத்து வலி கழுத்துவலி இளம் வயதினரையும் பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் உணவுப்பழக்கவழக்கம் மற்றும் நவீன வாழ்க்கை முறை, பைக், கார் போன்றவற்றில் மோசமான ரோட்டில் பயணம் செய்வது, அதிகநேரம் குனிந்து அமர்ந்து கம்ப்யூட்டர் டைப் செய்வது, எடையுள்ள பொருட்களை திடீரென தூக்குவது, உயரமான தலையணை வைத்து அதிக நேரம் படிப்பது, டிவி பார்ப்பது போன்ற செயல்களால் கழுத்து பகுதியில் சவ்வு பலகீனமடைந்து வலி ஏற்படுகிறது. டிஸ்க் விலகல் டிஸ்க் விலகல் என்பது கழுத்துப்பகுதியில் மற்றும் இடுப்பில் முதுகு தண்டுவடத்தில் எலும்புகளுக்கு இடையே உள்ள சவ்வு Intervertebral Disc என்றழைக்கப்படுகிறது. இது சில சமயம் பிதுங்கி வெளிவருவதுண்டு. இதனை Disc Prolapse என்கிறோம். டிஸ்க் விலகலை MRI Scan எடுத்து பார்ப்பதால் உறுதி செய்யலாம். கழுத்தில் சி2சி3, சி3சி4, சி4சி5, சி5சி6 போன்ற இடங்களில் டிஸ்க் விலக வாய்ப்புள்ளது. அப்படி ஏற்பட்டால் கழுத்தில் கடுமையான வலி மற்றும் திரும்ப சிரமம், வலி கழுத்திலிருந்து கைகளுக்கு பரவும். சில சமயம் கைவிரல்கள் மரத்தது போன்ற உணர்வும், படுக்கையில் படுக்கக் கூட சிரமத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் குனிந்து நிமிர்ந்தால் தலை சுற்றல் வரும். தலையின் பின்புறம் காதின் பக்கங்களில் வலி வரும். சில சமயம் முதுகின் பக்கவாட்டில் நெஞ்சுப்பகுதியில் குத்தல் போல வலி ஏற்படும். ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் இளம்பெண்கள் சிலருக்கு திடீரென கை விரல்கள்,மணிக்கட்டு, முழங்கை, முழங்கால், கணுக்கால், கால் விரல்களில் வீக்கம், கடுமையான வலி ஏற்படும். அதிகாலை படுக்கையை விட்டு எழும்போது கைவிரல்களை மடக்க முடியாமல் மணிக்கட்டில் கடுமையான வலி உணவு அருந்தும்போது உணவை பிசைய முடியாத அளவு வலி, தோள்பட்டையை மேலே தூக்க முடியாமல் சிரமம், முழுங்கால் மூட்டு வீக்கம் என திடீரென தோன்றும் அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள். இது மூட்டுவாத நோயின் அறிகுறியாக இருக்கலாம். இதனை கண்டறிய சில ரத்த பரிசோதனைகள் உள்ளன. ரத்தத்தில் Ra Factor, Uric Acid, ASO Titer, ESR, C-Reactive Protein போன்ற பரிசோதனைகள் மூலம் இந்த நோயை கண்டறிய முடியும். மூட்டுவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் எடை படிப்படியாக குறைவது, பசியின்மை, மலகட்டு, பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வெப்பத்தன்மை, காய்ச்சல் வருவது போல உடல் முழுவதும் வலி, அசதி, தூக்கமின்மை என உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு, பின் மனரீதியாகவும் மிகவும் பலவீனமாக காணப்படுவார்கள். இவர்களுக்கு முறையான ஆயுர்வேத சிகிச்சையும் தைரியமான அறிவுரைகள் சொல்லி கவுன்சிலிங் செய்வது மருத்துவர் கடமையாகும். ஆதாரம்: தினகரன் நாளிதழ்