<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify; ">அறிமுகம்</h3> <p style="text-align: justify; ">வெறிநாய்க்கடி நோய் ஒரு வைரல் தொற்றாகும். இது மூளையையும் நரம்பு மண்டலத்தையும் தாக்குகிறது. இது விலங்கில் இருந்து விலங்குக்குப் பரவும் நோய். நாயில் இருந்து மனிதனுக்கு பரவுவது போல் பொதுவாகத் தொற்றுள்ள ஒரு விலங்கு கடிக்கும்போது உண்டாகிறது. மனிதர்களுக்குத் தொற்றேறி கடுமையான அறிகுறிகள் தோன்று முன்னர் தடுப்பு மருந்து கொடுக்க வில்லை என்றால் உயிருக்கு ஆபத்தாக முடியும். வெறிநாய்க்கடி நோய் வைரஸ் நடுநரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. முடிவில் மூளை பாதிக்கப்பட்டு மரணம் ஏற்படுகிறது. புற நரம்புகள் வழியாக வைரஸ் மூளையை அடைகிறது. நடு நரம்பு மண்டலத்தை வைரஸ் அடைய வேண்டிய தூரத்தைப் பொறுத்து மனிதர்களில் நோயரும்பு காலம் பொதுவாக சில மாதங்களாக இருக்கும்.</p> <h3 style="text-align: justify; ">நோயறிகுறிகள்</h3> <p style="text-align: justify; ">தொற்று ஏற்படுவதற்கும், முதன்முதலில் சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதற்கும் இடையில் பொதுவாக 2-ல் இருந்து 12 வாரங்கள் பிடிக்கும். வழக்கமான அறிகுறிகளில் அடங்குவன:</p> <ul> <li>இலேசான அல்லது பகுதி பக்கவாதம்</li> <li>மனக்கலக்கம்</li> <li>தூக்கமின்மை</li> <li>குழப்பம்</li> <li>அமைதியின்மை</li> <li>அசாதாரண நடத்தை</li> <li>திகில்</li> <li>மருட்சியில் இருந்து சித்தபிரமை</li> </ul> <h3 style="text-align: justify; ">காரணங்கள்</h3> <p style="text-align: justify; ">வெறிநாய்க்கடி நோய் வைரஸ் லிசாவைரஸ் வகையைச் சார்ந்தது. இது பாலூட்டிகளைத் தாக்கும். தொற்றுள்ள விலங்கில் இருந்து இவ்வைரஸ் மனிதனுக்குக் கடி, கீறல் அல்லது தோல் வெடிப்புள்ள இடத்தில் அல்லது கண்ணில் நோயுள்ள விலங்கு நக்குவது மூலமாக பரவும்.</p> <p style="text-align: justify; "><b>வெறிநாய்க்கடி நோய் எவ்வாறு பரவுகிறது?</b></p> <p style="text-align: justify; ">உடலுக்குள் புகும் ஒரு வைரஸ் நரம்பு முடிச்சை அடைவதற்குள் பெருகுகிறது. பின் அது தண்டு வடத்திற்கும் மூளைக்கும் (நடு நரம்பு மண்டலம்) செல்லுகிறது. நடு நரம்பு மண்டலத்தை அடைந்ததும் அது உமிழ்நீர் சுரப்பிகள், நுரையீரல், சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகளுக்குப் பரவும். மனிதர்களுக்கு இடையில் வெறிநாய்க்கடி நோய் பரவ முடியும் என்பது கொள்கை அளவில் இருந்தாலும் தொற்றேறிய உறுப்பு தானத்தின் மூலமே இதுவரை நடந்துள்ளது.</p> <h3 style="text-align: justify; ">நோய்கண்டறிதல்</h3> <p style="text-align: justify; ">வெறிநோய்க்கடி நோயை அதன் வளர்ச்சி அடைந்த கட்டத்தில் கண்டறியும் சோதனைகளில் அடங்குவன:</p> <ul> <li style="text-align: justify; ">தோல் திசு ஆய்வு - ஒரு தோல் மாதிரி எடுக்கப்பட்டு வெறிநாய்க்கடி வைரஸ் இருக்கிறதா என்று சோதிக்கப்படும்.</li> <li style="text-align: justify; ">உமிழ்நீர் சோதனை - உமிழ் நீர் மாதிரி வைரஸ் உள்ளதா என்று சோதிக்கப்படும்.</li> <li style="text-align: justify; ">இடுப்புத் துளையிடல் - ஓர் ஊசியின் மூலம் மூளைத்தண்டுவட நீர்மம் எடுக்கப்பட்டு வெறிநாய்க்கடி நோய் எதிர்பொருள் உள்ளதா என்று சோதிக்கப்படும் (மூளைத்தண்டுவட நீர்மம் என்பது மூளையையும் தண்டுவடத்தையும் சுற்றி இருக்கும் நீர்மம்)</li> <li style="text-align: justify; ">இரத்த சோதனை - வெறிநாய்க்கடி நோய் எதிர்பொருள் உள்ளதா என்று இரத்தம் சோதிக்கப்படும்.</li> </ul> <h3 style="text-align: justify; ">நோய் மேலாண்மை</h3> <p style="text-align: justify; ">நோயாளிக்கு ஏதாவது அறிகுறிகள் தென்படுகிறதா என்பதைப் பொறுத்தே மருத்துவம் அமைகிறது.</p> <p style="text-align: justify; ">தொற்று ஏற்பட்டு 10 நாட்களுக்குள் தடுப்பு மருந்து அளிக்கப்பட்டால் நோய் வெற்றிகரமாகத் தடுக்கப்படுகிறது. சிகிச்சையில் அடங்குவன:</p> <ul> <li style="text-align: justify; ">காயத்தைச் சுத்தப்படுத்துதல்</li> <li style="text-align: justify; ">வெறிநாய்க்கடி நோய் எதிர்ப்புரதம் (rabies immunoglobulin) அளித்தல் - எதிர்பொருள்களின் ஒரு பக்குவமான தயாரிப்பு.</li> <li style="text-align: justify; ">வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசித் தொகுதி</li> </ul> <h3 style="text-align: justify; ">தடுப்புமுறை</h3> <p style="text-align: justify; ">அபாயத்தில் இருப்போர்க்கு பாதுகாப்பளிக்கும் தடுப்பு மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. வெறிநாய்க்கடி நோய் தடுப்பு மருந்து, மனித இருதொகுதி உயிரணு தடுப்பு மருந்து (Human diploid cell vaccine (HDCV), சுத்திகரிக்கப்பட்ட கோழிக்கரு உயிரணு தடுப்புமருந்து (Purified chick embryo cell vaccine (PCECV) ஆகிய வடிவங்களில் கிடைக்கின்றன. வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பு மருந்து அளிப்பதற்கான அட்டவணை வருமாறு:</p> <ul> <li style="text-align: justify; ">நாய்க்கடிக்குப் பின் முதல் வேளை மருந்து கொடுக்க வேண்டும்.</li> <li style="text-align: justify; ">ஏழு நாட்களுக்குப் பின் இரண்டாம் வேளை மருந்து கொடுக்க வேண்டும்.</li> <li style="text-align: justify; ">முதல் வேளைக்குப் பின் 21 அல்லது 28 நாட்கள் கழித்து மூன்றாம் வேளை மருந்து கொடுக்க வேண்டும்.</li> <li style="text-align: justify; ">வெறிநாய்க்கடி நோய் அபாயத்தில் இருப்பவர்கள், எதிர்பொருள் அளவைப் பாதுகாக்க, ஒவ்வொரு இரண்டாண்டுக்கு ஒருவேளை செயலூக்கியாகத் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.</li> </ul> <p style="text-align: justify; ">ஆதாரம் : <a class="ext-link-icon external-link" href="https://ta.nhp.gov.in/" target="_blank" title="வெளி இணையதளம் ஒரு புதிய சாளரத்தில் திறக்கிறது">தேசிய சுகாதார இணையதளம்</a></p> </div>