<div id="Middlecolumn_internal"> <p style="text-align: justify; ">ஈறு பிரச்சனை என்பது குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை எதிர்கொள்ளும் பிரச்சனை.</p> <p style="text-align: justify; ">ஈறுதான் நம் பற்களின் வேர்களை வெளிபுறத்திலிருந்து பாதுகாக்கின்றன. எப்போது வேரில் தொற்று ஏற்படுகிறதோ அல்லது பற்களில் பாதிப்பு ஏற்படுகிறதோ, அப்போது ஈறுகளில் வீக்கமாய் அவைகள் பிரதிபலிக்கும்.</p> <p style="text-align: justify; ">ஈறு வெளிர் அல்லது அடர் பிங்க் நிறத்திலிருந்து சிவப்பு நிறத்திற்கு மாறினால், ஈறுகளில் பிரச்சனை உள்ளது என அறியலாம்.</p> <p style="text-align: justify; ">இதனால், ஈறு வீக்கமடைந்து, வலி ஏற்படும். பல் விளக்கும் போதும் , சாதாரணமாகவும், ரத்தக் கசிவு ஏற்படும்.</p> <h3 style="text-align: justify; ">ஈறு வீக்கத்திற்கு காரணங்கள்</h3> <p style="text-align: justify; ">பொதுவாக ஈறு வீக்கத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஈறு அழற்சி(gingivitis), ஊட்டச் சத்து குறைபாடு, தொற்று நோய் மற்றும் கர்ப்ப காலத்திலும் ஏற்படும். இது அல்லாமல் புகைபிடித்தல், தவறான முறையில் பல் கட்டுதல், தவறான முறையில் பல் விளக்குதல் என பல காரணங்கள் உள்ளன நல்ல அனுபவம் வாய்ந்த பல் மருத்துவரிடம், பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.</p> <h3>ஈறு வீக்கத்திற்கு வீட்டிலேயே நிவர்த்தி செய்வது எப்படி?</h3> <p style="text-align: justify; ">கூடுமான வரையில் ஈறு வீக்கத்தையும் வலியையும் வீட்டிலேயே சரி செய்யலாம். அதற்கான வழிமுறைகள் :</p> <p style="text-align: justify; "><strong>உப்பு நீரில் கொப்பளித்தல்</strong></p> <p style="text-align: justify; ">ஈறு வீக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தினமும் வெது வெதுப்பான உப்பு நீரில் கொப்பளித்தால் பல் வலி மற்றும் ஈறு வலி வராது. உப்பு சிறந்த கிருமி நாசினி. அது பற்களின் வேர் வரை சென்று கிருமிகளை அழிக்கிறது.</p> <p style="text-align: justify; "><strong>சூடான மற்றும் ஐஸ் ஓத்தடம்</strong></p> <p style="text-align: justify; ">சூடான நீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து , பிழிந்து முகத்தில் ஈறு வலி இருக்கும் பகுதியில் ஒத்தடம் வைக்கலாம். அதேபோல், ஐஸ் பேக் அல்லது ஐஸ் கட்டியை துணியில் சுற்றி வீக்கம் இருக்கும் பகுதியில் வைக்கலாம். இதனால் வலி குறையும்.</p> <p style="text-align: justify; "><strong>ஹைட்ரஜன் பெராக்ஸைட்</strong></p> <p style="text-align: justify; ">இது கிருமி நாசினி. பல் சம்பந்தமான பிரச்சனைகளை எதிர்க்கும். ஈறு வீக்கத்திற்கும், வலிக்கும் மிக நல்லது. ஹைட்ரஜன் பெராக்ஸைடை கடையில் கேட்கும் போது 3% என கேட்டு வாங்க வேண்டும்.</p> <p style="text-align: justify; "><strong>உபயோகப்படுத்தும் முறை:</strong></p> <p style="text-align: justify; ">3% ஹைட்ரஜன் பெராக்ஸைடை சம அளவு நீரில் எடுத்துக் கொண்டு, வலி இருக்கும் ஈறின் மேல் நனைக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்க வேண்டும் ஒரு ஸ்பூன் சோடா உப்புடன் தேவையான அளவு ஹைட்ரஜன் பெராக்ஸைடை கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். அதனை வீக்கம் அல்லது வலி இருக்கும் இடத்தில் தேய்த்து ஒரு நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்க வேண்டும்.</p> <p style="text-align: justify; "><strong>குறிப்பு:</strong></p> <p style="text-align: justify; "><strong>ஹைட்ரஜன் பெராக்ஸைடை விழுங்கக் கூடாது.</strong></p> <p style="text-align: justify; "><strong>மஞ்சள்</strong></p> <p style="text-align: justify; ">மஞ்சள் ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தது. ஈறில் ஏற்படும் தொற்றுக்களுக்கு மருந்தாகும். மஞ்சளை நீருடன் கலந்து பேஸ்ட் போல செய்து, வீக்கம் இருக்கும் இடத்துல் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்யவும் ஐந்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்க வேண்டும். இதை தினமும் இருமுறை செய்யலாம்.</p> <p style="text-align: justify; "><strong>டீ பேக் (Tea Bags)</strong></p> <p style="text-align: justify; ">தேயிலையில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது..ஈறு வீக்கத்தினை கட்டுப்படுத்தும்.</p> <p style="text-align: justify; ">சூடான நீரில் டீ பேக்கை அமிழ்த்தவும் சில நிமிடங்கள் கழித்து டீ பேக்கை எடுக்கவும்.</p> <p style="text-align: justify; ">பொறுக்கும் சூட்டில் வாயினுள் வீக்கம் இருக்கும் பகுதியில் ஒத்தடம் தரவும். பின்னர் வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிக்கவும். தினம் ஒரு அல்லது இருமுறை செய்யலாம்.</p> <p style="text-align: justify; "><strong>சோற்றுக் கத்தாழை</strong></p> <p style="text-align: justify; ">இது வீக்கத்திற்கு நல்ல மருந்து. ரத்தக் கசிவை நிறுத்தும். தொற்றுக்களிலிருந்து காப்பாற்றும்.</p> <p style="text-align: justify; ">சோற்றுக் கத்தாழையினுள் உள்ள ஜெல் பகுதியை எடுத்து வலி உள்ள இடத்தில் மெதுவாக தேய்த்து மஸாஜ் செய்யவும்.</p> <p style="text-align: justify; ">இரு நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்கவும். இதை நீங்கள் தினமும் செய்யலாம்</p> <p style="text-align: justify; "><strong>தேயிலை எண்ணெய்</strong></p> <p style="text-align: justify; ">தேயிலை எண்ணெய் சிறந்த ஆன்டி பயாடிக் ஆகும். தொற்றுக்களை வேகமாய் அழிக்கிறது. மேலும்,ஈறு எரிச்சலிலிருந்தும் விடுதலை அளிக்கிறது.</p> <p style="text-align: justify; ">தேயிலை எண்ணெய் சில சொட்டுக்கள் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளிக்கவும். தினம் இருமுறை செய்யலாம்.</p> <p style="text-align: justify; ">தேயிலை எண்ணெய் கொண்ட பற்பசையை கடையில் வாங்கி உபயோகிக்கலாம்.</p> <p style="text-align: justify; "><strong>குறிப்பு-</strong></p> <p style="text-align: justify; ">தேயிலை எண்ணெயை விழுங்கக் கூடாது. இது வயிற்றுப் பிரச்சனைக்கு வழி வகுக்கும்.</p> <p style="text-align: justify; "><strong>ஆயில் புல்லிங்</strong></p> <p style="text-align: justify; ">ஆயில் புல்லிங் ஈறு சம்பந்தமாக மட்டுமின்றி உடலின் எல்லா பிரச்சனைகளுக்கும் நல்லதாகும். ஈறின் வழியே ரத்த நாளங்களில் ஊடுருவி நோய்களை நிவர்த்தி செய்கிறது. ஆலிவ், நல்லெண்ணெய் போன்ற ஏதாவது சுத்தமான எண்ணெயை சிறிதளவு வாயில் ஊற்றி, ஈறின் உள்ளே செல்லும்படி சில நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும். எண்ணெய் வெண்மை நிறமாக மாறும் வரை கொப்பளிக்க வேண்டும். பல் விளக்குவதற்கு முன்னர் இதை செய்யவும்.</p> <p style="text-align: justify; "><strong>விட்டமின் D </strong></p> <p style="text-align: justify; ">உடலில் கால்சியம், பாஸ்பரஸ் பற்றாக்குறையினால், பற்களில் பிரச்சனைகள் வரலாம். எனவே விட்டமின் D நிறைந்த உணவுகளை உண்டால் பற்கள், எலும்புகள் உறுதி பெறும், ஈறு பலப்படும்.</p> <p style="text-align: justify; "><strong>ஊட்டச் சத்து</strong></p> <p style="text-align: justify; ">போதிய அளவு ஊட்டச் சத்து இல்லையெனில் முதலில் பாதிப்பது பற்களும் ஈறுகளும் தான். ஆதலால் சரிவிகித உணவை எடுத்துக் கொள்வது அவசியம். தினமும் பழங்கள், கீரைகள், காய்கறிகள், ப்ரொட்டீன் நிறைந்த உணவுகள் உண்ண வேண்டும்.</p> <h3>மேலும் சில பொதுவான குறிப்புகள்</h3> <p style="text-align: justify; ">தினமும் பல் இருமுறை, முக்கியமாக இரவில் விளக்க வேண்டும். மிகவும் சூடான அல்லது குளிர்ச்சியான உணவினை தவிர்க்கவும். புகையிலை உபயோகித்தல் பற்களை மிகவும் பாதிக்கும். செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட உணவுகள் உண்ணக் கூடாது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருதுவரிடம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்</p> <p style="text-align: justify; ">உடலின் ஆரோக்கியம் உங்கள் பற்களில் தெரியும். பற்களின் ஆரோக்கியம் உங்களின் உடலில் பிரதிபலிக்கும். ஆகவே எதுவும் வரும் முன் காப்பது உகந்தது.</p> <p style="text-align: justify; ">ஆதாரம் : http://tamil.boldsky.com</p> </div>