<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">நெஞ்சுத்தசையழிவு, மாரடைப்பு என்று அழைக்கப்படும். இது மிகவும் பரவலான, பரவாத மற்றும் நீடித்த நோய் ஆகும். இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவாது. இது மெதுவாக வளர்ந்து இதயத்துக்கு இரத்தம் செல்வதைப் பாதிக்கிறது.</p> <p style="text-align: justify;">நெஞ்சுத்தசையழிவு மருத்துவ ரீதியாக ஓர் அவசர நிலையாகும். இதயத்துக்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் தமனியில் ஒன்று அடைபடுவதால் இது நிகழ்கிறது. இதனால் இதயத்துக்குத் தேவைப்படும் உயிர்வளி குறைவுபட்டு இதற்கே உரிய ஒருவகை நெஞ்சு வலியுடன் இதயத்திசு அழிவும் உண்டாகிறது.</p> <h3 style="text-align: justify;">நோயறிகுறிகள்</h3> <p style="text-align: justify;">பொதுவாக, அறிகுறிகள் படிபடியாகத் தோன்றுகின்றன. நெஞ்சு வலியே கடுமையான நெஞ்சுத்தசையழிவின் பொதுவான அறிகுறி. இதனுடன் வழக்கமாகக் கீழ் வருவனவும் இருக்கும்:</p> <p style="text-align: justify;">இறுக்க உணர்வு</p> <p style="text-align: justify;">அழுத்தம்</p> <p style="text-align: justify;">பிசைதல்</p> <p style="text-align: justify;">வலி பொதுவாக இடது புயத்துக்குப் பரவும். ஆனால் கீழ்த்தாடை, கழுத்து, இடது புயம், முதுகு, மேல்வயிறு ஆகிய பகுதிகளிலும் பரவலாம். அங்கு இது நெஞ்செரிச்சல் போன்று தோன்றும்.</p> <p style="text-align: justify;">லெவின் அடையாளம்: நோயாளி இதய நெஞ்சு வலியை முன்னுணர்ந்தது போல், தனது மடக்கிய முட்டியை மார்பெலும்பின் மேல் வைத்து நெஞ்சுவலியை ஓரிடத்தில் கட்டுப்படுத்துதல்.</p> <p style="text-align: justify;">பிற அறிகுறிகளில் அடங்குவன:</p> <p style="text-align: justify;">மூச்சடைப்பு</p> <p style="text-align: justify;">பதட்டம்</p> <p style="text-align: justify;">இருமல்</p> <p style="text-align: justify;">இழுப்பு</p> <h3 style="text-align: justify;">காரணங்கள்</h3> <p style="text-align: justify;">கடுமையாக உடலை வருத்தும்போது மாரடைப்பு விகிதம் அதிகரிக்கிறது. அது உளவியல் அழுத்தத்தாலோ உடல் உலைவாலோ உண்டாகலாம்.</p> <p style="text-align: justify;">இதனுடன் தொடர்புள்ள பிற ஆபத்துக் காரணிகள்:</p> <p style="text-align: justify;">வயது: வயது ஏற ஏற மாரடைப்பின் அபாயம் அதிகரிக்கிறது.</p> <p style="text-align: justify;">பால்: பெண்களை விட ஆண்களே அதிக அபாயத்தில் உள்ளனர்</p> <p style="text-align: justify;">நீரிழிவு நோய்</p> <p style="text-align: justify;">அதிக இரத்த அழுத்தம்</p> <p style="text-align: justify;">டைசிலிப்பிடெமியா / மிகைகொலெஸ்ட்ரால் (இரத்தத்தில் அதிக அளவு லிப்போ புரதம் இருப்பது), குறிப்பாக, அதிகக் குறை-அடர்த்தி லிப்போபுரதம், குறைந்த மிகை-அடர்த்தி லிப்போபுரதம் மற்றும் டிரைகிளிசரைடுகள்</p> <p style="text-align: justify;">புகைத்தல், மறைமுகமாகப் புகையுட்கொள்ளுதல் உட்பட</p> <p style="text-align: justify;">குடும்ப நோய் வரலாறு: குறிப்பாக நோயாளியின் முதல் நிலை உறவினர்களுக்கு (தந்தை, தாய், சகோதரர், சகோதரி) இதய நோய்கள் அல்லது நெஞ்சுத்தசையழிவு நோய் இருந்தால்.</p> <p style="text-align: justify;">உடல் செயல்பாடுகள் இன்மை</p> <p style="text-align: justify;">மது – நீண்ட நாட்களுக்கு அதிக அளவில் மது பயன்பாட்டால் மாரடைப்பு வரும் அபாயம் அதிகம்.</p> <p style="text-align: justify;">வாய்வழி கர்ப்பத்தடை மாத்திரைகள்: கூட்டு வாய்வழி கர்ப்பத்தடை மாத்திரைகள் உட்கொண்டு வரும் பெண்களுக்கு, குறிப்பாக புகைத்தல் போன்ற ஆபத்துக் காரணிகளும் இருந்தால் நெஞ்சுத்தசையழிவு உண்டாகும் அபாயம் அதிகம்.</p> <h3 style="text-align: justify;">நோய்கண்டறிதல்</h3> <p style="text-align: justify;">உடல் பரிசோதனை</p> <p style="text-align: justify;">அறிகுறிகளுக்கு ஏற்ப நோயாளியின் தோற்றம் மாறுபடும். பொதுவாகக் குளிர்ந்து வெளிறிய தோல் இரத்த நாள சுருக்கத்தை சுட்டிக்காட்டும். சிலருக்கு குறைந்த அளவு காய்ச்சல் இருக்கும் (38–39 °C). இரத்த அழுத்தம் அதிகரிக்கும் அல்லது குறையும். நாடித்துடிப்பு முறையற்று இருக்கும்.</p> <p style="text-align: justify;"><strong>மின்னிதயமானி (ECG)</strong></p> <p style="text-align: justify;">I மற்றும் V1-V5 –ல் ST-பிரிவு உயர்ச்சியைக் காட்டினால் அது இதயத்தசைத்திசு இறப்புக்கு அறிகுறியாகும். நோயாளிகளை மூன்று குழுக்களில் ஒன்றில் வகைப்படுத்த 12-லீடு ECG பயன்படுத்தப்படுகிறது.</p> <p style="text-align: justify;">ST பிரிவு உயர்ச்சி அல்லது புதுத்தொகுப்பு கிளைத்தொகுதி உள்ளவர்கள்</p> <p style="text-align: justify;">ST பிரிவு உயர்ச்சி அல்லது T அலை மாறுபாடு உடையவர்கள் (குருதி ஊட்டக் குறை இருக்கலாம்)</p> <p style="text-align: justify;">கண்டறியா அல்லது இயல்பான ECG உடையவர்கள். இயல்பான ECG-யின் மூலம் கடுமையான நெஞ்சுத்தசையழிவு இல்லை என்று உறுதிப்படுத்த முடியாது.</p> <p style="text-align: justify;">விளக்கங்களில் தவறு ஏற்படுதல் ஓரளவு பொதுவாகக் காணப்படும் ஒன்றே. அதிக ஆபத்தான காரணிகளை இனங்காண முடியாமற் போவது நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் தரத்தில் எதிர்மறை விளைவை உண்டாக்குகிறது.</p> <p style="text-align: justify;"><strong>இதயக் குறிப்பான்கள் (Cardiac markers)</strong></p> <p style="text-align: justify;">சிதைந்த நெஞ்சுத்திசுக்களின் உயிரணுக்களில் இருந்து, அவற்றின் சவ்வுகள் வழியே வெளிக்கசிந்து வந்து, இரத்த ஓட்டத்தில் கலக்கும் புரதங்களே இதயக்குறிப்பான்கள் அல்லது இதய நொதிகள் (என்சைம்கள்) ஆகும். நெஞ்சுத்தசையழிவைக் கண்டறியப் பெரிதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் நொதிகள், கிரியேட்டைன் கினேஸ் மற்றும் கார்டியாக் டிரோப்போனின்ஸ் T மற்றும் I ஆகியவையே. நெஞ்சுத்தசை சிதைவு கண்டறிதலில் இவை குறிப்பாகப் பயன்படுகின்றன. கார்டியாக் டிரோப்போனின்ஸ் T மற்றும் I, நெஞ்சுத்தசையழிவு ஏற்பட்டு 4-6 மணி நேரத்தில் வெளியிடப்படுகின்றன. இரண்டு வாரம் வரை அதிக அளவில் இருக்கும். திசுத் துல்லியம் ஏறத்தாழ முழுமையாக இருப்பதால் தற்போது நெஞ்சுத்தசை சிதைவைக் கண்டறிய இவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நெஞ்சுத்தசையழிவைக் கண்டறிய, நோய்வரலாறு, மின்னிதயமானி, நொதி ஆகிய மூன்று கூறுகளில் இரண்டு தேவைப்படுகின்றன. இதயத்துக்கு சிதைவு உண்டாகும்போது, இதய குறிப்பான்களின் அளவு நேரம் செல்லச் செல்ல அதிகமாகும்.</p> <p style="text-align: justify;"><strong>இரத்தக்குழல் வரைவி (Angiography)</strong></p> <p style="text-align: justify;">இரத்த ஓட்டத்தைச் சீரமைக்க இரத்தக்குழாய் வரைவி சோதனை செய்யப்படுகிறது. வடிகுழாய் (catheter) ஒன்று, ஒரு தமனியின் வழியாக (பொதுவாகத் தொடை தமனி) நுழைக்கப்பட்டு, இதயத்திற்கு இரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்களுக்குள் செலுத்தப்படும். ஒரு ரேடியோ ஒளிபுகா சாயம் வடிகுழாய் வழியாக செலுத்தப்பட்டு தொடர் எக்ஸ்-கதிர்ப் படங்கள் (ஒளிர்வுச்சோதனை) எடுக்கப்படுகின்றன. அடைபட்ட அல்லது சுருங்கிய இரத்தக் குழாய்கள் இனங்காணப்படுகின்றன. இரத்தக் குழாய்ச் சீரமைப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரத்தக் குழாய்ச் சீரமைப்பு சிகிச்சை அளிப்பதற்கு விரிவான திறமை தேவைப்படும் (குறிப்பாக அவசரகாலத்தில்). இதய அறுவை மருத்துவத்தில் பயிற்சி பெற்ற மருத்துவர் இதைச் செய்கிறார்.</p> <p style="text-align: justify;"><strong>உடல்பயிற்சி அழுத்த சோதனை (Exercise stress test)</strong></p> <p style="text-align: justify;">நோயாளி ஓர் ஓடுபொறியில் நடக்கும்போது இதயத்துடிப்பு அளவிடப்படுகிறது. அதிக இரத்தத்தைச் செலுத்தும்போது இதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைக் கணிக்க இது உதவும்.</p> <p style="text-align: justify;"><strong>டாப்லர் சோதனை (Doppler test)</strong></p> <p style="text-align: justify;">ஓர் இரத்தக் குழாய் வளியாக இரத்தம் எவ்வாறு பாய்கிறது என்பதைக் கண்டறிய, டாப்லர் சோதனையில் பிரதிபலிக்கப்பட்ட ஒலி அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. புயங்கள், கால்கள், கழுத்து போன்ற பெரும் தமனிகளிலும் சிரைகளிலும் பாயும் இரத்தத்தை மதிப்பிட மருத்துவர்களுக்கு இது உதவி செய்கிறது. கழுத்தில் உள்ள பெரும் தமனிகளில் உண்டாகும் அடைப்பு அல்லது சுருக்கம் ஆகியவற்றை (இவைகளினால்தான் இரத்த ஓட்டம் குறைந்து நெஞ்சுத்தசையழிவு ஏற்படுகிறது) இது காட்டும்.</p> <p style="text-align: justify;">தேசிய சுகாதார இணையதளம் ஆரோக்கியத்தைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள குறிப்பான தகவல்களை அளிக்கிறது. எந்த ஒரு நோய் கண்டறிதலுக்கும் மருத்துவத்திற்கும் நீங்கள் உங்கள் மருத்துவரையே கலந்தாலோசிக்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">நோய்மேலாண்மை</h3> <p style="text-align: justify;">எவ்வளவு விரைவாகக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக உயிர்வளியும், ஆஸ்பரினும் கொடுக்கப்படுகிறது.</p> <p style="text-align: justify;">எதிர்த் தட்டணு செயலூக்கி:</p> <p style="text-align: justify;">ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் இறப்பு விகித்தத்தைக் குறிப்பிடத்தக்க விதமாகக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இம்மருந்துகளினால் ஒவ்வாமை ஏற்படாதவர்களுக்கு, அவற்றை எவ்வளவு விரைவாகக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாகக் கொடுக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>இரத்தக்குழாய் சீராக்கும் சிகிச்சை:</strong></p> <p style="text-align: justify;">ஒரு முனையில் பலூன் இணைக்கப்பட்ட கதீட்டர் என அழைக்கப்படும் ஒரு நுண் வடிகுழாய் தொடை அல்லது புயத்தில் உள்ள பெரிய தமனி வழியாக நுழைக்கப்படுகிறது. இக்குழாய் இரத்தக் குழாய்கள் வழியாக இதயம் வரை செலுத்தப்படும். எக்ஸ்-கதிர்களால் வழிகாட்டப்படும் ஒரு நுண் வழிகாட்டும் கம்பியின் மூலமாக செலுத்தப்பட்டு இதய தமனியின் சுருங்கிய பகுதியை அடைகிறது. சரியான இடத்தை அடைந்ததும் பலூன் ஊதப்பட்டு சுருங்கிய இடம் விரிக்கப்படும். ஒரு வலைக்கண்ணி தமனிக்குள் செலுத்தப்பட்டு குழாய் மறுபடியும் சுருங்காது திறந்திருக்கும் வண்ணம் வைக்கப்படும்.</p> <p style="text-align: justify;"><strong>இரத்த உறைவை உடைத்தல்:</strong></p> <p style="text-align: justify;">இரத்த உறைவை உடைக்கும் பொருட்கள் ஊசி மூலம் செலுத்தப்படும். உறைவு உடைக்கும் பொருள் உறைதலுக்குக் காரணமான ஃபைப்ரினை குறிவைக்கும். ஃபைப்ரின் என்பது ஒரு கடினமான புரதமாகும். இது ஒரு நார் வலையைப் போல் செயல்பட்டு இரத்தத்தைச் சுற்றி கெட்டியாகி இரத்தத்தை உறைய வைக்கிறது. மாரடைப்பு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் எதிர் குருதி உறைவு மருந்துகளில் ரெட்டபிளேஸ் (reteplase), அட்டபிளேஸ் (alteplase) மற்றும் ஸ்ட்ரெப்டோகினேஸ் (streptokinase) ஆகியவை அடங்கும்.</p> <p style="text-align: justify;">தேசிய சுகாதார இணையதளம் ஆரோக்கியத்தைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள குறிப்பான தகவல்களை அளிக்கிறது. எந்த ஒரு நோய் கண்டறிதலுக்கும் மருத்துவத்திற்கும் நீங்கள் உங்கள் மருத்துவரையே கலந்தாலோசிக்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">சிக்கல்கள்</h3> <p style="text-align: justify;"><strong>குருதியூட்டக்குறை</strong></p> <p style="text-align: justify;">இது அசாதாரண இதயத் துடிப்பாகும். மிக வேகமாக, மிக மெதுவாக அல்லது முறையில்லாமல் இதயம் துடிக்கும். இது ஒரு மாரடைப்பிற்குப் பின் தசைகளுக்கு ஏற்படும் சிதைவால் உண்டாகிறது. இதயத்தைக் கட்டுப்படுத்த உடல் பயன்படுத்தும் மின் சைகைகளை சிதைவடைந்த தசைகள் தடை செய்கின்றன.</p> <p style="text-align: justify;"><strong>இதயப்பீறல்</strong></p> <p style="text-align: justify;">இது மாரடைப்பின் போது பொதுவாக ஏற்படும் கடுமையான சிக்கலாகும். இதயத்தின் தசைகள், சுவர்கள், அல்லது அடைப்பிதழ்கள் சிதைவடைவதே இதயப் பீறல் எனப்படும். ஒரு மாரடைப்பின் போது இதயம் குறிப்பிடத்தக்க அளவில் சிதைவடைந்தால் இதயப்பீறல் உண்டாகலாம். இது, பொதுவாக மாரடைப்பு ஏற்பட்டு ஒன்றில் இருந்து ஐந்து நாட்களுக்குப் பின் நிகழலாம்.</p> <p style="text-align: justify;"><strong>இதயச்செயலிழப்பு</strong></p> <p style="text-align: justify;">உடல் முழுவதற்கும் இதயத்தால் சரியான வகையில் இரத்தத்தை செலுத்த முடியாத நிலையே இதயச்செயலிழப்பு எனப்படும். இதய தசைகள் விரிவாக சிதைவடைந்து விட்டால் ஒரு மாரடைப்புக்குப் பின் இது நிகழும். இது பொதுவாக இதயத்தின் இடது பக்கம் உண்டாகும் (இடது இதயக்கீழறை).</p> <p style="text-align: justify;"><strong>இதய அதிர்ச்சி</strong></p> <p style="text-align: justify;">இதுவும் மாரடைப்பு போன்றதே. ஆனால் அதைவிட ஆபத்தானது. இதய தசைகள் முற்றிலுமாக சிதைவடைந்து உடலின் பல செயல்பாடுகளுக்கு போதுமான இரத்தத்தைச் செலுத்த முடியாத போது இந்நிலை உண்டாகிறது.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தேசிய சுகாதார இணையதளம்</p> </div>