<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">மசாலா மற்றும் வாசனைப் பொருட்கள் இந்திய சமையல் கலையில் அத்தியாவசியமான பொருட்களாகும். மசாலா மற்றும் வாசனைப் பொருட்கள் உணவு தயாரிப்பில் நறுமணத்தைக் கூட்டவும், சுவையை அதிகரிக்கவும் சேர்க்கப்படுகின்றன. <span style="text-align: justify;">இவற்றின் சத்துக்களின் மதிப்பு மிகக் குறைவு. ஒரு சில மசாலாக்கள் இரும்பு சத்து மிகுந்தது. அத்துடன் சிறிய ஆதார பொருட்களையும், பொட்டாசியம் போன்றவற்றையும் கொண்டது. <span style="text-align: justify;">மிளகாய், தனியா போன்றவற்றில் B- கரோட்டின் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. பச்சை மிளகாயில், B - கரோட்டினும், உயிர்ச்சத்து C யும் மிகுந்து உள்ளது. <span style="text-align: justify;">மசாலாக்கள் என்பன வாசனை மிகுந்த தாவரப் பொருட்கள் ஆகும். மசாலா பொருட்கள் உணவை சமைக்கவும் தாளிக்கவும் பயன்படுகிறது. <span style="text-align: justify;">வாசனை பொருட்கள் உணவு தயாரித்த பின் மணமூட்டவும், சுவையூட்டவும் பயன்படுகிறது. அவை உணவு பரிமாறும் மேசையில், அவரவர் தேவைக்கேற்ப உணவில் சேர்ப்பதற்காக வைக்கப்படுகிறது (உ-ம்) உப்பு. எனினும், மசாலாப் பொருட்கள் மற்றும் வாசனைப் பொருட்கள் இரண்டிற்கும் குறிப்பிடத்தக்க அளவு வேறுபாடுகள் இல்லை.</span></span></span></span></p> <h3 style="text-align: justify;">சமையலில் பயன்படுத்தப்படும் மசாலா, வாசனைப் பொருட்களின் பயன்கள்</h3> <h4 style="text-align: justify;">ஒமம்</h4> <p style="text-align: justify;">கறிவகைகள், ஊறுகாய், பிஸ்கட்டுகள், பானங்கள், மிட்டாய்கள் இவற்றில் அதன் தனித்தன்மையை வெளிப்படுத்தவும், வாசனைக்காகவும், காரச் சுவைக்காகவும் பயன்படுகிறது. <span style="text-align: justify;">வலியை அகற்றும் மருந்தாகவும், பசிதூண்டும் ஊக்கியாகவும், சீரணக் கோளாறுகளை சீர்செய்யும் தூண்டு கோலாகவும் பயன்படுகிறது.</span></p> <h4 style="text-align: justify;">சோம்பு</h4> <p style="text-align: justify;">கறிவகைகள், கேக்குகள், ரொட்டிகள், பிஸ்கட்டுகள் போன்ற பொருட்களில் சுவையூட்டப் பயன்படுகிறது. சோம்பு தனியாகவும், சர்க்கரைப் பாகுடன் உலர்த்தப்பட்டும் பயன்படுத்தப் படுகிறது. இந்திய பண்பாட்டு முறையில் சாப்பாட்டிற்கு பின், வாய்க்கு நறுமணம் ஊட்டவும் பயன்படுகிறது. <span style="text-align: justify;">வயிற்றில் உப்புசம் (flatulence), வயிற்று வலி - இவற்றைத் தடுக்கவும் உபயோகப்படுத்தப்படுகிறது.</span></p> <h4 style="text-align: justify;">பெருங்காயம்</h4> <p style="text-align: justify;">ரசம், சாம்பார், எலுமிச்சை சாதம், போன்றவற்றை தாளிக்கவும் சுவை யூட்டவும் பயன்படுகிறது. கறிவகைகள், ஊறுகாய்கள் மற்றும் சாஸ்கள் - இவற்றிற்கு நறுமணமூட்டப் பயன்படுகிறது. <span style="text-align: justify;">ப்ராங்கைட்டீஸ் (Bronchitis) மற்றும் கக்குவான் இருமல் போன்றவற்றை குணப்படுத்தவும், குடல் உறுப்புகளில் வாயுக்களால் ஏற்படும் வயிற்று உபாதைகளை சரி செய்யவும் பயன்படுகிறது. வினிகரை வாசனையூட்டவும், புலால், பிரியாணி, சூப் (Soup), மாமிசம் போன்ற தயாரிப்புகளிலும் பயன்படுகிறது.</span></p> <h4 style="text-align: justify;">பிரிஞ்சி இலை</h4> <p style="text-align: justify;">கறிவகைகள், கேக்குகள், இனிப்புகள், பானங்கள், ரொட்டிகள் ஆகியவற்றில் நறுமணமூட்ட பயன்படுகிறது. <span style="text-align: justify;">பசியைத் தூண்டவும், சீரணக் கோளாறுகளை சரி செய்யவும், சிறு நீரக கோளாறுகளை சரி செய்யவும் பயன்படுகிறது. ஊறுகாய், சாஸ் போன்றவற்றை தாளிக்கவும், மணமூட்டவும் பயன்படுகிறது. இனிப்புகள் தயாரிப்பிலும் உபயோகிக்கப்படுகிறது.</span></p> <h4 style="text-align: justify;">பூண்டு</h4> <p style="text-align: justify;">இரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. சீரணக் கோளாறுகளை சரி செய்கிறது. இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்துகிறது. அஸ்பெர்ஜிலஸ் (Aspergillus) மற்றும் கான்டிடா (Candida) போன்ற பூஞ்சை காளான்களின் வளர்ச்சியை தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. நுண்ணுயிரிகள் வளர்ச்சியை தடுப்பதுடன், சரும நோய்களையும், காது வலியை தீர்க்கவும், புற்று நோயை தடுக்கும் பொருளாகவும் பூண்டு விளங்குகிறது.</p> <h4 style="text-align: justify;">இஞ்சி</h4> <p style="text-align: justify;">ஊறுகாய், கறிபொடிகள், கறி விழுது, கறிமசாலாக்கள் ஆகியவற்றில் உபயோகிக்கப்படுகிறது. உப்புமா போன்ற காரவகை உணவு வகையில் ருசியூட்டுகிறது. இஞ்சி ரொட்டிகள், இஞ்சி பிஸ்கட்டுகள், இஞ்சி முரபாக்கள், இஞ்சி பானங்கள் போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மூட்டு வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. மூட்டு வலி, ஒற்றைத்தலைவலி, வாந்தி போன்றவைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.</p> <h4 style="text-align: justify;">பச்சை வெங்காயம்</h4> <p style="text-align: justify;">பச்சடிகளிலும், தயிர் பச்சடிகளிலும் சேர்க்கப்படுகிறது. கறிவகைகளிலும், மீன்வறுவல்களிலும் சேர்க்கப்படுகிறது. சட்னி, ஊறுகாய்களிலும் இடம் பெறுகிறது. உலர்ந்த வெங்காயம் மணமூட்ட பயன்படுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உபயோகிக்கப்படுகிறது. உடலில் நுண்ணுயிர் பெருக்கத்தைத் தடுக்கவும் பயன்படுகிறது.</p> <h4 style="text-align: justify;">பட்டை</h4> <p style="text-align: justify;">கறிவகைகளை தயாரிக்கும் போது சேர்க்கப்படுகிறது. மாமிச தயாரிப்புகளிலும் இனிப்பு தயாரிப்புகளிலும் சேர்க்க வேண்டிய முக்கிய பொருளாக <span style="text-align: justify;">கருதப்படுகிறது.</span></p> <h4 style="text-align: justify;">கிரா</h4> <p style="text-align: justify;">உணவகங்களில் பரிமாறும் மேசைகளின் மீது புத்துணர்ச்சி அளிக்கும் பொருளாக வைக்கப்படுகிறது. கறிவகைகள் தயாரிப்பில் பயன்படுகிறது. பிரியாணி, புலாவ் போன்றவற்றில் முக்கியமான வாசனைப் பொருளாக பயன்படுகிறது. பல்வலி, தசைபிடிப்பு, தலைவலி மற்றும் சீரணத்திற்கும் மருந்து <span style="text-align: justify;">பொருளாகவும் பயன்படுகிறது. </span></p> <h4 style="text-align: justify;">கறிவேப்பிலை</h4> <p style="text-align: justify;">ரசம், சாம்பார் போன்ற எல்லாத் தென் இந்திய உணவுகளிலும் மற்றும் பூந்தி, மிக்சர் (mixture) போன்ற காரங்களிலும் சேர்க்கப்படுகிறது. சட்டினி மற்றும் பொடிகள் செய்யப் பயன்படுகிறது. கொத்தமல்லி பச்சையாக சட்டினியிலும், இலை பச்சடியிலும் சேர்க்கப்படுகிறது. இவை தயாரித்த உணவுகளின் நறுமணத்தைக் கூட்டவும், உணவை அலங்கரிக்கவும் பயன்படுகிறது.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்</p> </div>