<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">பாட்டி வைத்தியத்தின் மகத்துவம்</h3> <p style="text-align: justify;">நாம் விஞ்ஞான உலகமான இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இருந்தால் கூட நம்முடைய பழமை வாய்ந்த பாட்டி வைத்தியமான கை வைத்தியத்தியத்தின் பலன் பக்க விளைவின்றி நன்மை தரக்கூடிய ஒன்றாகும்.</p> <h3>தலை வலி குறைய</h3> <p style="text-align: justify;">கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.</p> <p style="text-align: justify;">வெற்றிலையை இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் கிராம்பை நன்றாக அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும்.</p> <h3>வாய் புண்</h3> <p style="text-align: justify;">மோரில் சிறிதளவு உப்பை சோ்த்து அதை ஐந்து நிமிடம் வாயில் வந்திருந்து பின்பு கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் வாய்ப்புண் குறையும்.</p> <p style="text-align: justify;">நன்கு பழுத்த நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.</p> <h3>பல் வலி</h3> <p style="text-align: justify;">பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.</p> <h3>இருமல்</h3> <p style="text-align: justify;">கிராம்பை இடித்துப் பொடி செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குறையும்.</p> <p style="text-align: justify;">வேலிப்பருத்திச் சாறு, துளசிச் சாறு, பசு வெண்ணெய், கருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்துக் காய்ச்சி வடித்து காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.</p> <h3>விக்கல்</h3> <p style="text-align: justify;">விக்கல் வரும் போது 1 கிண்ணம் அளவு தயிரை எடுத்து 1 தேக்கரண்டி உப்பு போட்டு மெதுவாக சாப்பிட்டு வந்தால் விக்கல் குறையும்.</p> <p style="text-align: justify;">விடாமல் விக்கல் எடுத்தால் துளசி இலைகளை பச்சையாக சாப்பிட்டு வந்தால் விக்கல் குறையும்.</p> <h3>சளி</h3> <p style="text-align: justify;">வெற்றிலைச் சாற்றைக் கொதிக்க வைத்து பின்பு ஆறவைத்து நெற்றி பகுதியில் பற்றுப் போட்டு வந்தால் ஓயாதச் சளி குறையும்.</p> <p style="text-align: justify;">தூதுவளைச் சாறு, துளசி இலைச் சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் ஓயாத சளிக் குறையும்.</p> <h3>கழுத்துச் சுளுக்கு</h3> <p style="text-align: justify;">ஆமணக்கு எண்ணெயை கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி அதன் மேல் புளிய இலையை ஒட்ட வைத்து இரண்டு மணிநேரம் கழித்து வெந்நீரால் உருவி விட்டால் கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு குறையும்.</p> <p style="text-align: justify;">சம அளவு எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் எடுத்து நன்றாக கலந்து சுளுக்கு இருக்கும் இடத்தில் சிறிது விட்டு நன்கு தடவி விட்டு வந்தால் சுளுக்கு குறையும்.</p> <h3>தூக்கமின்மை</h3> <p style="text-align: justify;">வெங்காயத்தை தோல் உரித்து அதில் சிறிதளவு உப்பைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டிக் கொள்ளவேண்டும். வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.</p> <p style="text-align: justify;">நல்லெண்ணெயில் பாகற்காய் சாறு கலந்து படுக்கும் முன் இந்த எண்ணெயை உச்சந்தலையில் ஊற்றி நன்றாக தேய்த்து விட்டு படுத்தால் தூக்கம் நன்றாக வரும்.</p> <h3>மூலம்</h3> <p style="text-align: justify;">கண்டங்கத்திரிப் பூ, நல்லெண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி மூலத்தில் தடவி வந்தால் மூலநோய் குறையும்.</p> <p style="text-align: justify;">திப்பிலி, சுக்கு, எள் ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து நன்கு அரைத்து பொடி செய்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.</p> <h3>நினைவாற்றல்</h3> <p style="text-align: justify;">பத்து பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும்.</p> <p style="text-align: justify;">வல்லாரை கீரையை தினமும் துவரம் செய்து சாப்பிட நினைவாற்றல் பெறுகும்.</p> <h3>ஒற்றை தலைவழி</h3> <p style="text-align: justify;">ஒற்றை தலைவலி ஏற்படும் போது 1 டம்ளர் கேரட் சாறில் சிறிது வெள்ளரிகாய் சாறு மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.</p> <p style="text-align: justify;">முட்டைகோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதைக் கொண்டு தலையின் மீது ஒத்தடம் கொடுத்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.</p> <h3>கால் ஆணி</h3> <p style="text-align: justify;">அத்திக்காயை எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும். கால் மிருதுவாகும்.</p> <p style="text-align: justify;">மல்லிகை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து கால் ஆணி மீது பூசி வந்தால் கால் ஆணி குறையும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: கிராணி தெரபி</p> <p style="text-align: justify;"> </p> </div>