<div id="Middlecolumn_internal"> <p style="text-align: justify;">தற்போதைய ஆரோக்கியமற்ற, நவீன வாழ்க்கை முறையினால், நம் ஒட்டுமொத்த உடலும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக கடைகளில் விற்கப்படும் ஜங்க் உணவுகளை அதிகம் உட்கொள்வதால், உடலில் அழுக்குகள் அதிகம் தேங்குவதோடு, ஒட்டுண்ணி பூச்சிகளின் வளர்ச்சியும் அதிகமாக உள்ளது.</p> <p style="text-align: justify;">இதன் காரணமாக உடலுறுப்புக்களின் செயல்பாடுகள் குறைந்து, பல்வேறு நோய்கள் உடலைத் தாக்குகின்றன. எனவே இன்றைய தலைமுறையினர் தங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, இயற்கை வழிகளை நாடுகின்றனர்.</p> <p style="text-align: justify;">நீங்களும் உங்கள் உடலை சுத்தமாகவும், நோய்களின்றியும் வைத்துக் கொள்ள நினைப்பவராயின், இங்கு கொடுக்கப்பட்டுள்ள பானத்தை தினமும் ஒரு டம்ளர் பருகி வாருங்கள். இதனால் உங்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதை நன்கு உணர்வீர்கள்.</p> <h3>தேவையான பொருட்கள்</h3> <p style="text-align: justify;">எலுமிச்சை – 1</p> <p style="text-align: justify;">இஞ்சி - 1 துண்டு</p> <p style="text-align: justify;">சிவப்பு/பச்சை ஆப்பிள் – 2</p> <p style="text-align: justify;">தண்ணீர் - 1 டம்ளர்</p> <h3>செய்யும் முறை</h3> <p style="text-align: justify;">* முதலில் எலுமிச்சையை சாறு எடுத்துக் கொள்ளவும். பின் இஞ்சியை தோலுரித்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.</p> <p style="text-align: justify;">* பின்பு மிக்ஸியில் ஆப்பிளை தோலுரிக்காமல் துண்டுகளாக்கிப் போட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சேர்த்து, தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">எப்போது பருக வேண்டும்?</h3> <p style="text-align: justify;">இந்த பானத்தை காலையில் தயாரித்து, உணவு உண்ணும் முன் வெறும் வயிற்றில் பருக வேண்டும். முக்கியமாக இந்த ஜூஸைப் பருகியப் பின், 1 மணிநேரத்திற்கு எதுவும் உட்கொள்ளக்கூடாது. இப்படி ஒரு வாரம் பருகி வந்தால், உடலினுள் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்வீர்கள்.</p> <h3 style="text-align: justify;">பயன்கள்</h3> <p style="text-align: justify;"><strong>நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்</strong></p> <p style="text-align: justify;">மழைக் காலத்தில் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படும். இதற்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான் காரணம். மேற்கண்ட பானம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி கொண்டவை.</p> <p style="text-align: justify;"><strong>ஒட்டுண்ணிகள் வெளியேறும்</strong></p> <p style="text-align: justify;">ஒவ்வொருவரின் உடலிலும் நம்மை அறியாமலேயே ஒட்டுண்ணி புழுக்கள் நுழைந்து, வயிற்றில் வாழ்ந்து கொண்டிருக்கும். உடலில் புழுக்கள் அதிகம் இருப்பின், நாம் உண்ணும் உணவை புழுக்கள் உட்கொண்டு அவை ஆரோக்கியமாகி, நம்மை மெலிய வைக்கும். ஆனால் இந்த ஜூஸைக் குடித்தால், ஒட்டுண்ணிப் புழுக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்படும்.</p> <p style="text-align: justify;"><strong>நச்சுக்கள் நீங்கும்</strong></p> <p style="text-align: justify;"><span style="text-align: justify;">மேற்கண்ட</span> பானத்தை ஒருவர் ஒரு வாரம் தொடர்ந்து பருகி வந்தால், ஜங்க் அல்லது ஃபாஸ்ட் புட் உணவுகளால் உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியிருக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் அல்லது அழுக்குகள் வெளியேற்றப்படும்.</p> <p style="text-align: justify;"><strong>கல்லீரல் சுத்தமாகும்</strong></p> <p style="text-align: justify;">முக்கியமாக இந்த பானம் கல்லீரலை சுத்தம் செய்யும். எனவே கல்லீரலை சுத்தம் செய்ய நினைத்தால், இந்த ஒரு பானத்தை தினமும் ஒரு டம்ளர் பருகி வாருங்கள்.</p> <p style="text-align: justify;"><strong>இதய நோய்கள் தடுக்கப்படும்</strong></p> <p style="text-align: justify;">இந்த பானத்தில் உள்ள எலுமிச்சை மற்றும் இஞ்சி கொழுப்புக்களைக் கரைக்கும் உட்பொருட்களைக் கொண்டது. எனவே இந்த பானத்தைப் பருகுவதால், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: மஹாலக்ஷ்மி, ஒன்இந்திய நாளிதழ்</p> </div>