<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;">பத்தாயிரம் ஆண்டில் சர்வதேச அரங்கில் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலை பெறுவளர்ச்சி இலக்குகளை எட்ட இந்தியா முயன்று வருகிற வேளையில், 2015 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய காலகட்டத்தில், பிள்ளைப்பேற்றின் போது தாய்மார்கள் உயிரிழப்பதைக் குறைக்கும் பணி முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு கர்ப்பமும் தனித்துவமானது. எனவே, கருவுற்ற ஒவ்வொரு தாய்க்கும் சிறப்புக்கவனம் தேவை. முன்கூட்டிய அறிகுறிகள் தோன்றியும் அல்லது தோன்றாமலும், உயிருக்கு ஆபத்தான நிலை கருவுற்ற பெண்களுக்கு ஏற்படலாம். எனவே பிள்ளைப் பேற்றின் போது உயிராபத்தான சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்க கருவுற்ற ஒவ்வொரு தாய்க்கும் தரமான மருத்துவ சேவை அளிக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களின் காரணமாக கருவுற்ற தாய்மார்களின் நலன்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் பிள்ளை பேறு நடப்பது அதிகரித்துள்ளதுடன், பிள்ளைப்பேற்றுக்கு முந்தைய கவனிப்புப் பெறுவோரின் எண்ணிக்கையும் கூடியுள்ளது. சமீபத்திய கணக்கெடுப்புகளின் படி நம் நாட்டில் 78.7 சதவீதம் பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறகின்றன. எனினும், கருவுற்ற முதல் மூன்று மாத காலத்திற்குள்ளான மருத்துவ கவனிப்பைப் பெறுகின்ற பெண்களின் எண்ணிக்கை 61.8 சதவீதம் மட்டுமே பிள்ளை பேற்றுக்கு முந்தைய முழுமையான மருத்துவ கவனிப்பை (100 IFA மாத்திரைகள், இரண்டு டெடனஸ் டாக்ஸாய்டு ஊசிகள், குறைந்தது மூன்று முறை பரிசோதனைகள்) வெறும் 19.7 சதவீதப் பெண்கள் மட்டுமே பெறுகின்றனர்.</p> <p style="text-align: justify;">கருவுற்ற காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் பற்றிய வழிகாட்டல்கள், அவ்வாறு எடுத்துக்கொள்வதற்கு ஆதரவு அளிக்கவும் கண்காணிக்கவுமான ஏற்பாடுகள், நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு இதற்கென சிறப்புத் தொடர்பயிற்சிகள், கிராம சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நாள் போன்ற ஏற்பாடுகள் உள்ளிட்டவை இருந்த போதிலும், கருவுற்ற பெண்களுக்கான மருத்துவ சேவைகள் முழுமையாகச் சென்று அடையவில்லை என்பது கவலைக்குரிய விஷயமாகும். தற்சமயம் ஒரு லட்சம் குழந்தைகள் பிறந்தால், அதில் 167 தாய்மார்கள் உயிரிழந்துவிடுகின்றன. இது மிகவும் அதிகமாகும். கருவுற்ற சமயத்திலும் குழந்தைப்பிறப்பின் போதும் நேரிடும் அபாயங்களைத் தக்கசமயத்தில் கண்டறிந்தால், தாயின் இறப்பைத் தடுத்துவிடலாம். தடுக்கக்கூடிய ஐந்து காரணங்களால் ஏற்படும் தாயின் மரணத்தை தடுக்க கருவுற்ற பெண்களுக்குத் தக்க மருத்துவப் பரிசோதனைகளும் சேவையும் அளிக்கப்பட வேண்டும்.</p> <p style="text-align: justify;">இந்த நோக்கத்திற்காக மத்திய அரசு தொடங்கிய திட்டம் தான் பிரதான் மந்திரி சுரக்ஷித் மத்ரித்வ அபியான். இத்திட்டப்படி நாடு முழுவதும் கருவுற்றப் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நாளில் மகப்பேற்றுக்கு முந்தைய மருத்துவ கவனிப்பு வழங்கப்படும். இது வழக்கமான கவனிப்புகளோடு கூடுதலாக வழங்கப்படுவதாகும்.</p> <h3 style="text-align: justify;">செயல்படும் விதம்</h3> <p style="text-align: justify;">இதற்கென ஏற்படுத்தப்படும் பிரதான் மந்திரி சுரக்ஷித் மத்ரித்வ முகாம்களில் ஒவ்வொரு மாதமும் ஒன்பதாம் தேதி கருவுற்ற பெண்களுக்கு கர்ப்பகால மருத்துவசேவைகள் அளிக்கப்படுகின்றன. இந்த ஏற்பாட்டினால் ஆறு மாதத்திற்குள் அல்லது ஒன்பது மாதத்திற்குள் கருவுற்ற பெண்களுக்கு ஒரு முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஒருமாதத்தின் ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகவோ, வேறு விடுமுறை நாளாகவோ இருந்து விட்டால் அதற்கு அடுத்த நாள் முகாம்கள் செயல்படும்</p> <h3 style="text-align: justify;">PMSMA கீழ் சேவைகளை அணுகுவதற்கான பொது சுகாதார வசதிகள்</h3> <p style="text-align: justify;">• ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய மருத்துவ மையங்கள், ஊரக மருத்துவமனைகள், துணை மாவட்ட மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், நகர்ப்புற மருந்தகங்கள், பேறுகால விடுதிகள் போன்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.</p> <h3 style="text-align: justify;">வழங்கப்படும் சேவைகள்</h3> <p style="text-align: justify;">• ஒவ்வொரு மாதமும் ஒன்பதாம் தேதி நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமிற்கு வருகிறவர்கள் பற்றிய விவரங்கள் ஒரு பதிவேட்டில் பதியப்படும்.</p> <p style="text-align: justify;">• பதிவு செய்த பிறகு அங்குள்ள செவிலியர்கள் / உதவியாளர்கள் எல்லா விதமான ஆய்வகப் பரிசோதனைகளையும் செய்துவிடுவர், ஒரு மணி நேரத்திற்குள் அந்தப் பரிசோதனை முடிவுகள் கர்ப்பிணிப் பெண்களிடம் தரப்பட்டுவிடும். பின்னர் அந்த முடிவுகளோடு மகப்பேறு மருத்துவர் அவர்களைப் பரிசோதிப்பார். அதன் மூலம் ரத்தச்சோகை, கர்ப்பகால நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் நோய்த்தொற்று போன்றவை இருந்தால் அவர்களைத் தனியாக கவனித்து தொடர் மருத்துவம் தக்க ஆலோசனைகளும் வழங்கப்படும்.</p> <p style="text-align: justify;">• மேலும் கூடுதலாகப் பரிசோதனைகள் செய்ய வேண்டியிருந்தால் அவற்றைச் செய்து வருமாறும், அடுத்த முகாமில் அல்லது வழக்கமான மருத்துவ கவனிப்பின் போது மருத்துவரிடம் தெரிவிக்குமாறு சொல்லப்படும்.</p> <p style="text-align: justify;">• அல்ட்ரா சோனோகிராம் என்ற ஸ்கேன், ஹீமோகுளோபின் அளவு, சிறுநீர் அல்புமின், துரித மலேரியா பரிசோதனை, ரத்த வகைப்பாடு, உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படையான பரிசோதனைகள் செய்யப்படும்.</p> <p style="text-align: justify;">• பேறு காலத்தில் ஏதேனும் அபாய அறிகுறிகள் தெரிகின்றனவா என்றும் குழந்தைப் பிறப்பின் போது சிக்கல்கள் ஏதேனும் இருக்குமோ என்றும் ஒவ்வொரு கர்ப்பினியுக்கும் விரிவான குறிப்புகள் பராமரிக்கப்படும்.</p> <p style="text-align: justify;">• ரத்த அழுத்த அளவு, அடிவயிற்றுப் பரிசோதனை கருவின் இதயத்துடிப்பு ஆகிய பரிசோதனைகள் கட்டாயமாக செய்யப்படும்.</p> <p style="text-align: justify;">• சிறப்பு முகாமில் செய்ய முடியாத வேறு ஏதேனும் பரிசோதனைகளைச் செய்ய வேண்டியிருந்தால், அதற்கான மாதிரியை உரிய இடத்திற்கு அனுப்பி பரிசோதனை முடிவைப் பெற்று சம்பந்தப்படட கர்ப்பிணியிடம் தருவார்கள்</p> <p style="text-align: justify;">• பிரசவத்தின் போது சிக்கல் ஏற்படலாம் என்று கண்டறியப்படுகிற கர்ப்பிணிகள் உயர் வசதிகள் கொண்ட சிசு சுரக்ஷா திட்டத்தின் உதவி மையத்தின் மூலம் வேண்டிய மருத்துவ வசதிகள் செய்யப்படும். அனைவருக்கும் MCP அடையாள அட்டை வழங்கப்படும்.</p> <p style="text-align: justify;">• கருவுற்ற ஆறாவது மாததிற்குள் / ஒன்பதாவது மாதத்திற்குள் ஒருமுறை அல்ட்ரா கவுண்ட் ஸ்கேன் எடுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. தேவைப்பட்டால் இதற்கான செலவு ஜனனி சிசு சுரக்ஷா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.</p> <p style="text-align: justify;">• ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ சேர்த்து ஆலோசனைகள் வழங்கப்படும். ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள், ஓய்வு, கர்ப்பகாலத்தில் பாலுறவு, பிள்ளைப் பேற்றுக்குத் தயாராவது, மருத்துவமனைகளில் பிரசவம் வைத்துக்கொள்வதன் அவசியம், பிள்ளைப் பிறந்த பின் கைகொள்ளக்கூடிய கருத்தடை முறைகள் போன்ற தகவல்கள் இந்த ஆலோசனைகளின் போது வழங்கப்படும்.</p> <p style="text-align: justify;">• கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் MCP அட்டையில் நான்கு விதமான வண்ணங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்.</p> <ul> <li style="text-align: justify;">பச்சை வண்ணம் : எந்த விதமான அபாய அறிகுறியும் இல்லாதவர்</li> <li style="text-align: justify;">சிவப்பு வண்ணம் : பிள்ளைப் பேற்றில் அதிக அளவு அபாயம் இருக்கிறவர்</li> <li style="text-align: justify;">நீல வண்ணம் : கர்ப்பத்தினால் உயர்ரத்த அழுத்தம் ஏற்றபட்டவர்</li> <li style="text-align: justify;">மஞ்சள் வண்ணம் : கர்ப்பத்துடன் கூடிய நீரிழிவு தைராய்டு சுரப்பு அதிகமுள்ள நிலை போன்ற பிரச்சினைகள் உள்ளவர்</li> </ul> <p style="text-align: justify;">• ஜனனி சுரக்ஷா போஜனாவின் படி வழங்கப்படும் சலுகைகள் பற்றியும் ஜனனி சிசு சுரக்ஷா திட்டத்தின் படி உரிமையுள்ள சேவைகள் பற்றியும் அனைவருக்கும் எடுத்துரைக்கப்படும்.</p> <p style="text-align: justify;">• குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவது, இணை உணவுகள் வழங்குவது பற்றிய விவரங்கள் எடுத்துரைக்கப்டும்.</p> <p style="text-align: justify;">• தேவையில்லாத கர்ப்பம் அடைந்து விட்டவர்களுக்குத் தக்க ஆலோசனைகள் வழங்கிவிட்டு பாதுகாப்பான முறையில் கருக்கலைப்புக்கான வசதிகளும் செய்யப்படும்.</p> <p style="text-align: justify;">• ஆபத்தான பிரசவ கேஸ்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை, மாநில அரசின் ஆம்புலன்ஸ் சேவை அல்லது தனியார் ஆம்புலன்ஸ் சேவைகள் பயன்படுத்திக் கொள்ளப்படும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: உடல்நலம் மற்றும் குடும்பநல அமைச்சகம்</p> </div>